SDPI South Chennai President's message to all the Indians



The Social Democratic Party of India (SDPI) is a neo-political movement aiming at the renaissance of Indian politics to empower people of all social strata within the country. Let we all Indian citizens join hands in a common political platform to promote equality, freedom, justice and a harmonised living.

SDPI has come out with the slogan - "Freedom from hunger! Freedom from Fear"

I welcome all Indians - especially the Chennaites in promoting a harmonised polity to work for the welfare and development of India and the citizens. Our vision of "India - a Superpower in 2020" should be achieved with the advancement and empowerement of all Indians regardless of any caste, creed or religion.

- P. Mohamed Hussain
President, South Chennai District,
SDPI.

Tuesday, February 22, 2011

SDPI யின் சென்னை மண்டல மாநாடு 2011 ‍‍- முதல் படி! ‍வெற்றிப்படி!!

SDPI யின் சென்னை மண்டல மாநாடு வெற்றிகரமாக நடந்து முடிந்தது
 
 
கொடியசைத்து தொடங்கி வைக்கிறார் தேசிய தலைவர் அபூபக்கர் சாஹிப் அவர்கள் 

கோடி ஏற்றி வைக்கிறார் மாநில தலைவர் தெக்லான் பாகவி அவர்கள்  

பேரணியில் மாநில நிர்வாஹிகள் முன்னே செல்கின்றனர் 

பேரணி சென்னை மவுண்ட் ரோட்டை கடந்து செல்லுபோது 

தேசிய தலைவர் அபூபக்கர் சாஹிப் அவர்கள் உரையாற்றுகிறார்கள் 


அரசியலை நமதாக்குவோம்! தேசத்தைப் பொதுவாக்குவோம்! எனும் மாபெரும் முழக்கத்துடன் சென்னை இராயப்பேட்டை காயிதேமில்லத் திடலில் (ஒய்.எம்.சி.ஏ. வளாகம்) சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியாவின் சென்னை மண்டல மாநாட்டை காலை 9 மணியளவில் மாநிலத் தலைவர் கே.கே.எஸ்.எம். தெஹ்லான் கொடியேற்றி துவக்கி வைத்தார்.


அப்போது தேசிய மற்றும் மாநில, மாவட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர். இந்நிகழ்ச்சியில் எஸ்.டி.பி.ஐ.யின் செயல்வீரர்கள், தொண்டர்கள், பொதுமக்கள் திரளாகக் கலந்து கொண்டு எழுச்சிமிகு 
கோஷங்களை எழுப்பினர்

பிற்பகல் 2.45 மணியளவில் சென்னை எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் முன்பு எழுச்சிப் பேரணி துவங்கியது. பேரணியை எஸ்.டி.பி.ஐ.யின் அகில இந்தியத் தலைவர் இ. அபுபக்கர் அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

பேரணி நகரின் முக்கிய வீதிகள் வழியாக இறுதியில் 4.30 மணிக்கு மாநாட்டு திடலை வந்தடைந்தது.
அதனைத் தொடர்ந்து அரசியல் விழிப்புணர்வு நாடகம் நடைபெற்றது.

சரியாக மாலை 5 மணியளவில் எஸ்.டி.பி.ஐ. யின் கொள்கைப் பாடலுடன் தொடங்கிய பொதுக்கூட்டத்தில் எஸ்.டி.பி.ஐ.யின் பொதுச் செயலாளர் முபாரக் அவர்கள் வரவேற்புரையாற்றினார்.
அகில இந்திய மீனவர் சங்க தலைவர் அண்டன் கோமஸ், எஸ்.டி.பி.ஐ. கர்நாடக மாநில துணைத் தலைவர் பேரா. நாஸ்னி பேகம், நேஷனல் உமன்ஸ் ஃப்ரண்டின் துணைத் தலைவர் பாத்திமா ஆலிமா, தேசிய சிறுபான்மை மக்கள் இயக்கத்தின் தலைவர் அருள்தாஸ், எஸ்.டி.பி.ஐ.யின் தேசிய தலைவர் இ. அபுபக்கர், பாப்புலர் ஃப்ரண்டின் தமிழ்நாடு மாநில தலைவர் ஏ.எஸ். இஸ்மாயீல், எஸ்.டி.பி.ஐ.யின் தமிழ்நாடு மாநில தலைவர் கே.கே.எஸ்.எம். தெஹ்லான் பாகவி, மாநில பொதுச் செயலாளர் எஸ்.எம். ரஃபீக் அஹமது ஆகியோர் உரையாற்றினர். எஸ்.டி.பி.ஐ.யின் மாநில செயலாளர் அப்துல் சத்தார் மாநாட்டின் தீர்மானங்களை வாசித்தார். எஸ்.டி.பி.ஐ.யின் மாநில பொருளார் அம்ஜத் பாஷா நன்றியுரையாற்றினார்


மாநாட்டில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.1. நாடு முழுவதும் 2003 முதல் தொடர்ந்து நடந்த 10க்கும் மேற்பட்ட குண்டுவெடிப்பில் சம்பந்தப்பட்ட பயங்கரவகள் யார் என்பது தற்போது அம்பலமயுள்ளது. குண்டுவெடிப்பு வழக்குகளை துரிதப்படுத்தியும் சம்பந்தப்பட்ட தீவிரவாதிகள் உடனே கைது செய்யப்பட வேண்டும். மேலும் முன்னதாக கைது செய்யப்பட்ட அப்பாவி (மக்களை) உடனே விடுதலை செய்ய வேண்டும்.
2. சமீபத்தில் வெளியாகிய ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் சம்பந்தப்பட்டவ்ர்கள் மீது எடுக்கப்பட்ட கைது நடவடிக்கை போல், காமன்வெல்த் ஊழல் புகழ் கல்மாடி, ஆதர்ஸ் ஊழல் அசோக் சவான், நில மோசடி ஊழல் கர்நாடக எடியூரப்பா போன்றவர்களும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட வேண்டும். நீதி செலுத்தும் விஷயத்தில் எந்தப் பாகுபாடும் காட்டாமல் குற்றவாளிகள் உடனே தண்டிக்கப்பட வேண்டும்.
3. தமிழ்நாட்டில் முஸ்லிம்களுக்கான 3.5 சதவீதமான இடஒதுக்கீட்டை 5 சதவீதமாக உயர்த்தி தருவதை தன்னுடைய தேர்தல் வாக்குறுதியாக அரசியல் கட்சிகள் வரும் தேர்தல் அறிக்கையில் இடம் பெற்று செயல்படுத்த வேண்டும்.
4. வக்ஃப் சொத்துக்கள் பல இடங்களில் சமூக விரோத சக்திகளால் அபகரிக்கப்பட்டு ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. உடனடியாக அரசு தலையிட்டு அத்தனை வக்ஃப் சொத்துக்களையும் மீட்டெடுத்து நல்ல விஷயங்களுக்கு பயன்பட ஆவன செய்ய வேண்டும்.
5. தமிழக மீனவர்களை தொடர்ந்து படுகொலை செய்தும், சிறைப்பிடித்தும் வரும் இலங்கை ராணுவத்தினரின் அராஜகப் போக்கை வன்மையாக கண்டிக்கிறோம். இந்நிலை தொடர்ந்து கொண்டிருப்பது மிகவும் வேதனையளிக்கிறது. மத்திய அரசு மெத்தனப் போக்கை கடைப்பிடிக்காமல் உடனே தலையிட்டு தமிழக மீனவர்கள் நிம்மதியாக வாழ வழிவகை செய்ய வேண்டும்.
6. சமீப காலமாக தொடரும் தேர்தல் கால பணப் பட்டுவாடா நிலைகளும், ஓட்டுக்குப் பணம் என்கிற மோசமான செயல்பாடுகளை தேர்தல் ஆணையம் உடனே தலையிட்டு சரி செய்ய வேண்டும். ஜனநாயகம் கேலிக் கூத்தாக்கப்படுவதைத் தடுத்து நிறுத்தி அனைத்து சமூக மக்களின் வாக்குரிமையை நிலை நிறுத்த தேர்தல் ஆணையம் ஆவண செய்ய வேண்டும்.
7. முஸ்லிம்களுக்கும், ஹிந்துக்களுக்கும் மத துவேஷத்தை ஏற்படுத்தும் விதத்தில் ரத யாத்திரை நடத்தி வரும் பா.ஜ.க.வை வன்மையாக கண்டிக்கிறோம். ஏற்கனவே, மத்திய, மாநில அரசு நிதி உதவியில் அதிகமா கல்வி கற்பவர்கள் தாழ்த்தப்பட்ட, பழங்குடியின - பிற்படுத்தப்பட்ட சமூக மாணவர்கள். ஹிந்து சமூக மாணவர்களே அதிகம் சலுகைகளைப் பெற்று வருகின்றார்கள். இச்சூழலில் மாணவர்கள் மத்தியில் மத துவேஷத்தை ஏற்படுத்திட பா.ஜ.க. நடத்தும் ரத யாத்திரை மற்றும் பொது நிகழ்ச்சிகளை தமிழக அரசு தடுத்து நிறுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறோம்.
8. வரும் காலங்களில் முஸ்லிம்களின் பிரதிநிதித்துவத்திற்கேற்ப குறைந்த பட்சம் 10 தொகுதிகளை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் எஸ்.டி.பி.ஐ. வேண்டுகோள் விடுக்கிறது.
9. சமூகத்தைப் பிளவுபடுத்தி வரும் சமூக விவாத கும்பல்களோடு சமீபத்தில் கடையநல்லூர், ஏர்வாடி பகுதி காவல்துறையினரும் கைகோர்த்து நடத்தி வரும் அராஜகப் போக்கை வன்மையாக கண்டிக்கிறோம். எஸ்.டி.பி.ஐ. நெல்லை மாவட்ட பொது செயலாளர் மீது பொய் வழக்கு பதிவு செய்த காவல் துறையினர் மீதும், பள்ளிவாசலில் அத்துமீறி நுழைந்து அராஜகம் செய்த சமூக விரோத கும்பல் மீதும் மாநில அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என எஸ்.டி.பி.ஐ. வலியுறுத்துகிறது.
10. நலிந்து வரும் உருது மொழியை பாதுகாத்திடாமல் சமச்சீர் கல்வித் திட்டத்தின் மூலம் உருது மொழியை தமிழக அரசு மேலும் நலிவடையச் செய்திருக்கிறது. இந்நிலையை மாற்றி உருது மொழியை பாதுகாக்க தமிழக அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என எஸ்.டி.பி.ஐ. கேட்டுக் கொள்கிறது.
11. நலிவடைந்த நிலையில் வாழ்ந்து வரும் மீனவர்களின் வாழ்க்கை நிலையை கேள்விக்குறியாக்கும் கடல் அட்டை மீன் மீதான தடையை மத்திய அரசு விலக்கக் கோரியும் மீனவர்கள் மீது தொடரப்படும் வழக்குகளை மறுபரிசீலனை செய்து அவர்கள் வாழ்க்கைக்கு உதவிட மத்திய அரசை எஸ்.டி.பி.ஐ. கேட்டுக் கொள்கிறது.

மாநாடு சிறக்க, வருகை தந்து, பங்களித்த பொதுமக்கள், பத்திரிக்கையாளர்கள், உதவி புரிந்த காவல்துறை ஆகியோர் அனைவருக்கும் SDPI தென்சென்னை மாவட்டம், தனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றது.

மேலும் புதிய அரசியலில் பங்களிக்க, பரிணமிக்க அனைவரையும் அழைக்கிறது SDPI.

Monday, February 14, 2011

தியாகிகளின் வரிசையில்: வழக்கறிஞர் ஷாஹித் ஆஸ்மி

ஷாஹித் ஆஸ்மி - மனித நேயமிக்க துணிச்சலான வழக்கறிஞர். அதிகாரவர்க்கத்தின் அடக்கு முறையினால் பாதிக்கப்பட்ட மக்கள், அவர்கள் எந்த சமுதாயத்தைச் சார்ந்தவர்களாகயிருந்தாலும் அவர்களுக்காக வாதாடியவர்.

தீவிரவாத முத்திரைக்குத்தப்பட்ட எத்தனையோ முஸ்லிம் இளைஞர்களின் வழக்குகளை துணிவுடன் எடுத்து நடத்தி விடுதலையைப் பெற்றுத் தந்தவர். நீதிக்காக போராடிய அந்த இளைஞரை கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 11-ஆம் தேதி அக்கிரமக்காரர்களின் கைக்கூலிகள் துப்பாக்கித் தோட்டாக்களால் துளைத்தனர்.

நீதிக்கான போராட்டத்தில் அந்த லட்சிய வீரர் தனது இன்னுயிரை இழந்து ஒரு வருடம் நிறைவடைகிறது. இவ்வேளையில் அவரைக் குறித்த சில நினைவலைகளை அவருடன் தொடர்புடையவர்களிடமிருந்து பகிர்ந்து கொள்வோம்.

ஷாஹித் ஆஸ்மியின் தாயார் ரிஹானா ஆஸ்மி - இவருடைய கணவர்(ஷாஹிதின் தந்தை) இறந்து பல வருடங்களாகிவிட்டன. ரிஹானா மார்க்கப்பற்றுள்ள பெண்மணி. தனது பேச்சினூடே திருக்குர்ஆன் வசனங்களையும், நபிகளாரின் பொன்மொழிகளையும் மேற்கோள்காட்டுவார்.

தனது மகனைக் குறித்து ரிஹானா கூறுகிறார். "நான் எனது மகனை நினைத்து பெருமைப்படுகிறேன். அவனைக் கொன்றவர்கள் கட்டாயம். தூக்கிலேற்றப்பட வேண்டும். இதன் மூலம் எனது மகனுக்கு நீதிக் கிடைக்கவேண்டும்." எனக்கூறிய அவரிடம், உங்கள் மகனை கொலைச் செய்தவர்கள் யார்? எனக் கேட்டபோது, அவர் கூறினார், "ஹேமந்த் கர்காரேயை யார் கொன்றார்களோ? அவர்கள்தான்!" என பதிலளித்தார்.

'உங்கள் மகன் ஷாஹித் ஆஸ்மி கொலைச் செய்யப்பட்டுள்ள சூழலில், அதே வழக்கறிஞர் தொழிலுக்கு ஏன் உங்களது இளைய மகனையும் பணிபுரிய அனுமதித்தீர்கள்?’ என்ற கேள்விக்கு பதிலளித்த ரிஹானா, "நான் எனது இறைவனை சந்திப்பதைக் குறித்து பயப்படுகிறேன். உனது மூத்தமகன் கொலைச் செய்யப்பட்டதால் பயந்துபோய் உனது இளைய மகனை பாதிக்கப்பட்ட, ஏழை மக்களுக்காக உழைக்கும் பணியை ஏற்கச் செய்வதிலிருந்து தடுத்தாயா? எனக்கேட்டால் நான் என்னச் செய்வேன்?" என வினா எழுப்பிய ரிஹானா, "அல்லாஹ் எனது இளைய மகனை காப்பாற்றுவான்" என உறுதியுடன் தெரிவித்தார்.


மும்பை புறநகர் பகுதியான குர்லாவில் கிராந்தி நகர் சேரிப் பகுதியில் வசிப்பவர் தன்னா. 
இவர் ஒரு விதவையாவார். ஷாஹித் ஆஸ்மியைக் குறித்து நினைவுக்கூறும் பொழுது அவர் முகத்தில் தெரிந்த வருத்தத்தை நம்மால் உணரமுடிகிறது. அவருடைய கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தோடுகிறது. அவர் கூறுகிறார்: "எனது மகன் ஹேமந்த். அவனுக்கும் இன்னொரு நபருக்குமிடையே மோதல் ஏற்பட்டது. இதில் அந்த நபர் தற்செயலாக இறந்துவிட்டார். போலீசார் எனது மகன் மீது 302-பிரிவின் படி கொலைக் குற்றத்தை சுமத்தினர். நான் ஒரு விதவை. நான் எனது மகனை வழக்கிலிருந்து விடுவிக்க பல வழக்கறிஞர்களையும் அணுகினேன். வழக்கிற்காக என்னிடமிருந்த அனைத்தையும் விற்றதுதான் மிச்சம். எல்லா வழக்கறிஞர்களுமே 'உங்கள் மகனை எங்களால் காப்பாற்ற இயலாது' என கைவிரித்து விட்டனர். இந்நிலையில் ஷாஹித் ஆஸ்மியைக் குறித்து கேள்விப்பட்டு அவரை வெறுங்கையுடன் சென்று சந்தித்தேன்.

ஷாஹித் என்னிடம் இந்த வழக்கில் காசு வாங்காமலேயே வாதாடுகிறேன் எனத் தெரிவித்ததோடு 2006 ஆம் ஆண்டு எனது மகனுக்கு இவ்வழக்கிலிருந்து விடுதலையையும் பெற்றுத் தந்தார். எனது மகன் ஹேமந்தைப் போல் ஷாஹிதும் எனக்கு மகன்தான்.

70 அடி பரப்பளவைக் கொண்ட எங்கள் வீட்டில் ஷாஹித் வந்தால் தரையில் உட்காருவார். மாதந்தோறும் எங்களுக்கு நிதியுதவி அளித்து வந்தார். அவர் கொல்லப்படுவதற்கு முன்பாகக் கூட எங்களுக்கு நிதியுதவி அளித்தார். அவர் கொல்லப்பட்ட செய்தியைக் கேட்டதும் நாங்கள் அதிர்ச்சியடைந்தோம். ஏன் எனது மகனைப் போல் நான் கருதிய நேர்மையான மனிதரை கொலைச் செய்தார்கள் என்பது எனக்கு புரியவில்லை. நாங்கள் மீண்டும் அனாதையாக உணர்ந்தோம். ஆனால், அவருடைய சகோதரர் காலித் ஆஸ்மி தனது சகோதரரைப்போல் எங்களுக்கு உதவிச் செய்வதாக வாக்களித்தார். இப்பொழுது காலிதும் எங்களது மகன்தான். அவரை இறைவன்
காப்பாற்றுவான்." என தெரிவித்தார்.

ஷாஹித் ஆஸ்மி அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் கொலைச் செய்யப்பட்ட பொழுது இரண்டு கேள்விகள் மிஞ்சின. ஒன்று. யார் ஷாஹித் ஆஸ்மியின் கொலைக்கு பின்னணியிலிருந்து செயல்பட்டவர்கள்?

இரண்டாவது ஷாஹித் ஆஸ்மியின் பணியை யார் எடுத்து நடத்துவார்?

முதல் கேள்விக்கு இதுவரை விடை கிடைக்கவில்லை. ஆனால், இரண்டாவது கேள்விக்கு விடை அவருடைய இளைய சகோதரர் வழக்கறிஞர் காலித் ஆஸ்மியைத் தவிர வேறு எவரும் விடை தரவில்லை.

ஷாஹித் ஆஸ்மி இறந்து ஒருவாரத்திற்குள் அவரது சகோதரர் காலித் ஆஸ்மி, "நான் எனது சகோதரனின் குறிக்கோளை ஏற்று செயல்படுவேன்" என அறிவித்தார்.

கடந்த ஆண்டு பிப்ரவரி 25-ஆம் தேதி காலித் ஆஸ்மி தொலைபேசி வாயிலாக அளித்தப் பேட்டியில்; "நான் எனது சகோதரனின் குறிக்கோளை ஏற்றுக்கொண்டு செயல்படுவேன். அவரது பணிகளை சவாலாக ஏற்றுக்கொண்டு உரிய பங்களிப்பை செலுத்துவேன். நான் எனது உயிரைக் குறித்து அஞ்சவில்லை. குறிக்கோள்தான் முக்கியமானது. நான் இதற்காக விலைக் கொடுக்க தயாராகிவிட்டேன். இதனைத் தவிர எனது வாழ்க்கையில்
வேறொன்றுமில்லை" என்று கூறினார்.

அதனைத் தொடர்ந்து பல்வேறு சிக்கலான வழக்குகளில் அப்பாவிகள் மீது தொடுக்கப்பட்டுள்ள பொய்க் குற்றச்சாட்டுகளுக்கெதிராக வாதாடிக் கொண்டிருக்கிறார் அவர்.

Saturday, February 12, 2011

மீனவர் ஆர்ப்பாட்டம்: தமிழக அரசின் கடல் அட்டை மீதான தடையை நீக்க கோரி


இலங்கை கடற்படை தமிழக மீனவர்களை கொல்வது ஒருபுறமிருக்க, இந்திய அரசோ நம் மீனவர்களை பசியில் ஆழ்த்துகிறது. ஆம்! கடல் அட்டை மீன் பிடிப்பதன் மீது மத்திய அரசு தடை விதித்திருக்கிறது, சுற்றுப்புறச் சூழல் அமைச்சகத்தின் பரிந்துரையின் பேரில். இதனால் பல ஆயிரக்கணக்கான மீனவர்கள் வீடுகளோ வயிற்றுக்கு உணவு ஈய முடியாமல் தவிக்கிறது.

இத்தடையை அரசாங்கம் உடனே நீக்கக்கோரி 07.01.2011 அன்று காலை 11:00 மணியளவில் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இராமநாதபுரம் மாவட்ட மீன்பிடித்தொழிலாளர் யூனியன், இராமநாதபுரம் மாவட்ட சங்கு, பாசி தொழிலாளர் கூட்டமைப்பு மற்றும் கடலோர செயல்பாட்டு கூட்டமைப்பு ஏற்பாடு செய்த இந்த ஆர்ப்பாட்டத்தில் தென்சென்னை மாவட்ட தலைவர் முஹம்மது ஹுசைன் அவர்கள் கலந்து கொண்டு உரையாற்றுகையில் மீனவர்களுக்கு எதிரான இந்த தடையை உடனே  நீக்கக்கோரியும், மீனவர்களின் வாழ்வாதாரத்திற்கு வழிவகுக்க வேண்டுமென்றும் கூறினார். அவர் மேலும் பேசுகையில் , இவ்வாறு, தண்ணீரில் வாழும் மீனவன் கண்ணீரில் வாழ்வதை SDPI ஒருபோதும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்காது, மீனவர்களின் அனைத்து நியாயமான கோரிக்கைகளுக்காக நடைபெறும் போராட்டத்தில் எந்நேரமும் தோளோடு தோள் நிற்கும் என்று கூறினார். இந்நிகழ்ச்சியில் வடசென்னை மாவட்ட தலைவர் அமீர் ஹம்சா, பொதுச்செயலாளர் முஹம்மது ரஷீத், துறைமுகப் பகுதி தலைவர் அமீர் சுல்தான் மற்றும் ஏராளமான தொண்டர்களும் கலந்துகொண்டனர்.

நாட்டை உலுக்கும் ஊழலை எதிர்த்து SDPI ஆர்ப்பாட்டம்!


நமது நாட்டையும், நாட்டின் பொருளாதாரத்தையும் சுரண்டி, மக்களை விரக்திக்குள்ளாக்கிக் கொண்டிருக்கும் ஊழலை எதிர்த்து, Social Democratic Party of India (SDPI) நாடு தழுவிய ஊழல் எதிர்ப்பு போராட்டங்களை நடத்திற்று. மக்களுக்கெதிரான அனைத்து தீமைகளையும் எதிர்த்து களமிற‌ங்கிப் போராடுவதில் SDPI ஒருபோதும் சளைத்து நிற்காது எனக்காட்டுவதாக இந்த போராட்டங்கள் அமைந்தன.

தென்சென்னை மாவட்டம் சைதாப்பேட்டையிலுள்ள பனகல் மாளிகை முன்பு 27 நவம்பர் 2010 அன்று இந்த ஊழல் எதிர்ப்பு போராட்டம் நடைபெற்றது. தென்சென்னை மாவட்டம் சைதை தொகுதி சகோதரர் S.அப்துல் மஜீத் தலைமை தாங்கினார். சகோதரர்கள் மனோஜ், சுமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் சகோதரர்கள் மீரான் M.Sc., ஜுனைத் M.S(IT), ஜுனைத் அன்சாரி BE., ஆகியோர் முறையே வரவேற்புரையும், கண்டன உரையும் ஆற்றினர். சகோதரர் அக்பர் நன்றியுரை ஆற்றினார்.

பெருந்திரளான மக்கள் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர். மக்களின் மத்தியில் இப்போராட்டத்திற்கு சிறந்த ஆதரவு இருந்தது குறிப்பிடதக்கது. இந்திய மக்களின் நலம் விரும்பிகளான பல அரசியல் இயக்கங்களும் இத்தகைய போராட்டத்திற்கு தங்களது ஆதரவைத்தெரிவித்துக் கொண்டன.

Monday, February 7, 2011

வாழுமிடம்தான் கேள்விக்குறி! போகுமிடமுமா?


தென்சென்னை மாவட்டம் எம்.ஜி.ஆர் நகர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலுள்ள முஸ்லிம்கள் கடந்த 19 வருடங்களாக அடக்கஸ்தலம் வேண்டி, தமிழக அரசிடம் பலமுறை கோரிக்கை வைத்தும், மனு மீது மனு கொடுத்தும் அரசாங்கம் இன்னும் செவிமடுத்த பாடில்லை. இந்த கோரிக்கையை வலுப்படுத்தவும், அரசின் கவனத்தை ஈர்க்கவும் வேண்டி கடந்த 22‍ஜனவரி 2011 அன்று எம்.ஜி.ஆர் நகர் மார்க்கட் அருகே பொதுக்கூட்டம் நடைபெற்ற்து. இதில் அனைத்து முஸ்லிம் இயக்கங்களும், அரசியல் கட்சிகளும் பங்குகொண்டன.

இதில் உரையாற்றிய எஸ்.டி.பி.ஐ யின் தென்சென்னை மாவட்ட தலைவர் முஹம்மது ஹுசைன் பேசுகையில், ஒவ்வொரு பேச்சிலும் தமிழக முதல்வர் கருணாநிதி அவர்கள், தமிழன், தமிழன் என்று கூறுகிறார், ஆனால் த்மிழகத்திலோ தமிழன் வாழுமிடமும், வாழுமிடமும் மட்டுமல்ல மரணித்து போகுமிடமும் கேள்விக்குறியாகவே உள்ளது என்று பேசினார். மேலும், தமிழக அரசே! இருக்கும்போது வாழ்வதர்க்கு வீடு கேட்கவில்லை, இறந்த பிறகு அடக்கம் செய்ய இடம் கொடுத்தால் போதும் என்றார்.

மக்களுக்கு தங்களது அரசியல் நிலைமையை புரிய வைக்கக்கூடியதாக இந்த பொதுக்கூட்டம் அமைந்தது.

Sunday, February 6, 2011

ஏகாதிபத்திய அரசியல்வாதிகளுக்கோர் ‍எச்சரிக்கை! மக்களுக்கோர் நற்செய்தி!

சென்ற மாத‌ துனீசியா, இந்த மாத எகிப்து, செர்பியா, வரக்கூடிய மாதங்களிலே எத்தனை நாடுகளோ என்று எண்ணுமளவிற்கு இன்று உலக மக்கள் தங்களை அடக்குமுறைக்கு உட்படுத்தும் அரசுகளை துவம்சம் செய்ய துவங்கிவிட்டனர். படித்தவன், படிக்காதவன், ஏழை, பணக்காரன், ஜாதிமத‌ வித்தியாசமின்றி ஒன்றிணைந்து, ஒரு தலைமுறை மாற்றத்தை நோக்கிய பயணத்தை மேற்க்கொண்டுவிட்டனர். இந்த மாற்றம் ஏகாதிபத்திய, அடக்குமுறை அரசியல்வாதிகளுக்கோர் அறைகூவல் என்பதே உண்மை.

இந்தியர்களாகிய நாமும் ஒரு சிற‌ந்த அரசியல் மறுமலர்ச்சியை எதிர்நோக்குகிறோம். ஆனால் நமது நாட்டிலுள்ள அரசியல் சூழ்நிலையும் மற்ற நாடுகளிலுள்ள அரசியல் சூழ்நிலையும் ஒன்றுபோல் இல்லையே! துனீசியா, எகிப்து போன்ற நாடுகளிலோ அரசியல் எதிர்கட்சிகள் மக்களின் நலனுக்காக உழைக்கக்கூடிய, நலம் விரும்பிகளாக உள்ளன. ஆனால் இந்தியாவிலோ... அந்தோ பரிதாபம். இந்திய மக்களின் நலனுக்கு உழைக்க எந்தவொரு அரசியல் கட்சியும் இல்லையென்பதே உண்மையெனலாம். மக்கள் சற்றே சிந்திக்க வேண்டும். இதுவே நிலையென நீடிக்குமாயின் இனிவரும் நமது தலைமுறை நிம்மதி என்ற வார்த்தையைக்கூட, இன்னும் சுதந்திரத்தின் மணத்தைகூட நுகரமுடியாது.

இத்தகைய குழப்பத்திலும் இதோ கைகொடுத்து, இந்தியர்களின் உரிமைக்கு குரல் கொடுக்க, இழந்த உரிமையை மீட்டெடுக்க மக்கள் மத்தியிலே நிற்கிறது Social Democratic Party of India (SDPI). இந்திய அரசியலை இந்தியர் அனைவருக்கும் தமதாக்கி, நாட்டை இந்தியர்தம் உடைமையாக்கிட களமிறங்கியிருக்கிறது Social Democratic Party of India (SDPI).

மாற்றந்தனை, மறுமலர்ச்சிதனை அரவணைத்து , நமது கனவான இந்தியாவெனும் வல்லரசு அமைய, வந்திணைவீர் Social Democratic Party of India (SDPI).

Thursday, February 3, 2011

மக்கள் சக்தி ஒருங்கிணைந்தால்!

நான்கு நாள்களாக எகிப்து ஒரு மிகப்பெரிய மக்கள் புரட்சியை சந்தித்துக் கொண்டிருக்கிறது. கடந்த 30 ஆண்டுகளாக இரும்புக் கரம் கொண்டு மக்களின் பேச்சுரிமையையும், சுதந்திரத்தையும் அடக்கி வைத்து ஒரு சர்வாதிகார ஆட்சிக்குத் தலைமை தாங்கி வந்த அதிபர் ஹோஸ்னி முபாரக் பதவி விலகவேண்டும் என்கிற கோரிக்கை வலுத்திருக்கிறது.

ஆயிரக்கணக்கில் பொதுமக்கள் தெருவில் இறங்கி எகிப்தின் தலைநகரான கெய்ரோவில் மட்டுமல்லாமல் அலெக்சாண்டீரியா உள்ளிட்ட எல்லா நகரங்களின் மையப் பகுதிகளையும் தங்கள் வசப்படுத்தி இருக்கிறார்கள். ஆளும் தேசிய ஜனநாயகக் கட்சியின் அலுவலகங்கள் தீக்கிரையாக்கப்பட்டு வருகின்றன. அரசு அலுவலகங்கள், அரசு தொலைக்காட்சி நிலையங்கள், ஏன், அரசுக்கு ஆதரவான பத்திரிகை அலுவலகங்கள் அனைத்துமே தாக்கப்படுகின்றன.

ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். பல்லாயிரக்கணக்கானோர் கண்ணீர்ப்புகை வீச்சிலும், தடியடிப் பிரயோகங்களிலும் காயமடைந்திருக்கிறார்கள். இணையதளம், செல்பேசி போன்றவை அரசால் முடக்கப்பட்ட நிலையிலும் போராட்டம் வலுத்து வருகிறதே தவிரக் குறைவதாகத் தெரியவில்லை.இதற்கு முன்பு இதுபோன்ற மக்கள் போராட்டம் ஒன்று 1977-ல் எகிப்தை ஸ்தம்பிக்க வைத்தது. அதற்கு "ரொட்டிக் கலவரம்' என்று பெயர் சூட்டப்பட்டது. உணவுப் பஞ்சம்தான் அந்தக் கலவரத்துக்குக் காரணம். அன்றைய அதிபர் அன்வர் சதத்தின் ஆட்சியைப் பலவீனப்படுத்தி, ஆட்சி மாற்றத்துக்கு வழிகோலிய அந்தக் கலவரத்தைப் போலவே, இந்த மக்கள் புரட்சியும் ஆட்சி மாற்றத்துக்கு வழிகோலக்கூடும்.

விக்கிலீக்ஸ் வெளியிட்ட அதிர்ச்சி தரும் தகவல்களும், அல் ஜஸீரா தொலைக்காட்சி சேனலின் முனைப்புடன் கூடிய மக்கள் புரட்சிக்கு ஆதரவான செய்திகளும், எகிப்தில் ஏற்பட்டிருக்கும் கிளர்ச்சிக்கு வலு சேர்த்திருக்கின்றன என்பது தெளிவு.மக்கள் வெகுண்டெழுந்து தெருவில் இறங்கிப் போராடத் தொடங்கி இருக்கிறார்கள் என்றால் காரணம் இல்லாமல் இல்லை.

கட்டுக்கடங்காத விலைவாசி; சராசரி எகிப்து குடிமகனின் கைக்கெட்டாத உணவுப் பொருள்களின் விலையும் தட்டுப்பாடும்; பரவலாகக் காணப்படும் லஞ்ச ஊழல்; அரசின் வேவுத் துறையினரின் அட்டகாசம்; வேலையில்லாத் திண்டாட்டம் என்று உலகின் வேறு பல நாடுகளிலும் காணப்படும் அதே நிலைமைதான் எகிப்திலும்!

எட்டு கோடிக்கும் அதிகமான மக்கள் தொகையுடன் கூடிய எகிப்துதான் வட ஆப்பிரிக்காவிலும் மேற்கு ஆசியாவிலும் பெரிய நாடு. போதாக் குறைக்கு, உலகின் கிழக்குப் பகுதியையும், மேற்குப் பகுதியையும் இணைக்கும் சூயஸ் கால்வாய் எகிப்தின் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது. எகிப்தில் புரட்சி, எகிப்தில் ஆட்சிக் குழப்பம் என்றால் அது நிச்சயமாக உலகம் முழுவதும் எதிரொலிக்கும் என்பதில் சந்தேகமே கிடையாது.

இந்த முறை எகிப்தில் ஏற்பட்டிருக்கும் இந்தப் புரட்சியில் தனித்தன்மைகள் பல. எகிப்து நாட்டின் மக்கள் தொகையில் பாதிக்கும் மேல் 25 வயதுக்கும் குறைவான இளைஞர்கள். அவர்கள்தான் இந்த மக்கள் கிளர்ச்சிக்கு வித்திட்டு, முன்னின்று நடத்தி வருகிறார்கள். எதிர்க்கட்சியான முஸ்லிம் சகோதரத்துவ இயக்கம், போராட்டம் வலுத்தபிறகு வந்து சேர்ந்து கொண்டிருக்கிறதே தவிர, இந்தக் கிளர்ச்சியில் அதற்கு முக்கியப் பங்கு கிடையாது.இளைஞர்கள் தெருவில் இறங்கிப் போராடத் தொடங்கியபோது, அதுவரை மெளனமாக எல்லா அநீதிகளையும் சகித்துக் கொண்டிருந்த சாதாரணப் பொதுமக்கள் அவர்களுடன் தங்களை இணைத்துக்கொண்டு விட்டார்கள். சாதாரணக் கிளர்ச்சி மக்கள் போராட்டமாக வெடித்து விட்டிருக்கிறது.

இதில், அதிசயம் என்னவென்றால், இதுபோன்ற போராட்டங்கள் இஸ்லாமிய நாடுகளில் வெடிக்கும்போது, மதத் தீவிரவாதிகளின் கரம் ஓங்குவது வழக்கம். எகிப்தில் நேர்மாறாக "அல்லாஹ் அக்பர்' கோஷம் எழுப்பப்படவில்லை. "ஆட்சி மாற்றம் தேவை' என்கிற கோரிக்கைதான் எழுப்பப்படுகிறது. போராட்டத்தில் களமிறங்கி இருக்கும் எகிப்து மக்கள் மத்திய கிழக்கு நாடுகளில் அமெரிக்காவின் தலையீடை விரும்பாதவர்கள். ஆனால், அமெரிக்காவுக்கு எதிரான கோஷங்களை எழுப்பவில்லை.

எகிப்தில் ஏற்பட்டிருக்கும் மக்கள் புரட்சியில் இன்னொரு விசித்திரம்கூட அரங்கேறி இருக்கிறது. போராட்டத்தை அடக்க ராணுவத்துக்குக் கட்டளையிட்டால், நியாயமான கோரிக்கைகளுக்காகப் போராடும் மக்கள் இயக்கத்தின் மீது அடக்குமுறையை ஏவிவிட நாங்கள் தயாராக இல்லை என்று ராணுவம் மறுக்கிறது. பேச்சுரிமையும், ஜனநாயகமும் கேட்டுப் போராடும் எந்தக் கிளர்ச்சிக்கும் இதுவரை எந்த நாட்டிலும் ராணுவம் ஆதரவு கொடுத்ததாக சரித்திரம் இல்லை. எகிப்தில் அந்த அதிசயம் அரங்கேறி இருக்கிறது.

அதிபர் பராக் ஒபாமா கடந்த ஜூன் மாதம் கெய்ரோ பல்கலைக்கழகத்தில் பேசும்போது, கூறிய வார்த்தைகள் இவை - ""உலகின் எந்தப் பகுதியில் வாழ்ந்தாலும் மக்கள் சுதந்திரமாகத் தங்கள் கருத்தை வெளிப்படுத்தும் உரிமையையும் தாங்கள் யாரால், எப்படி ஆட்சி செய்யப்பட வேண்டும் என்கிற உரிமையையும் விரும்புகிறார்கள் என்பது எனது கருத்து!''.இப்படி அறிவித்த அமெரிக்க அதிபர், சர்வாதிகாரி ஹோஸ்னி முபாரக்குக்கு எதிராக, நல்லாட்சி கோரி, மக்களாட்சி கேட்டு நடைபெறும் எகிப்து இளைஞர்களின் புரட்சிக்கு ஆதரவு தெரிவிக்காதது ஏன்? அந்த இளைஞர்கள் தேசியக் கொடியைக் கைகளில் ஏந்தியபடி சர்வாதிகார ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கக் கோருகிறார்களே அவர்களை அமெரிக்கா மட்டுமல்ல, உலக நாடுகள் அனைத்தும் ஆதரிப்பதுதானே நியாயம்!

சிறிது நாள்களுக்கு முன்னர் துனிசியாவில் மக்கள் எழுச்சி ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தியது. இப்போது சர்வாதிகார ஆட்சியாளர்களுக்கு எதிராக எகிப்து, யேமன், ஜோர்டான் நாடுகளில் மக்கள் தெருவில் இறங்கிப் போராட முற்பட்டிருக்கிறார்கள். அரபு நாடுகளில் மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்பட இருப்பதை இந்தக் கிளர்ச்சிகள் கட்டியம் கூறுகின்றன. அரபு நாடுகளில் மட்டுமா? உலகம் முழுவதும் ஆட்சியாளர்கள் நல்லாட்சி தராமல் போனால் இதுதான் அரங்கேற இருக்கும் காட்சியாக இருக்கும்!

மக்கள் சிந்திப்பார்களேயானால், இதுபோன்ற அரசியல் சீர்திருத்தத்திற்கு வித்திடுவார்களேயானால் இவ்வுலகம் முழுவதும் மாற்றம் ஏற்ப்படும் என்பது உண்மை.

Tuesday, February 1, 2011

டி.என்.டி.ஜே.யின் அவதூறுகளும் கடைந்தெடுத்த முட்டாள்தனமும்! - SDPI பதிலடி

கடந்த 64 ஆண்டுகளாக அதிகாரவர்க்கத்தின் புறக்கணிப்பால், சங்பரிவார
ஃபாசிஸ்டுகளின் தாக்குதல்களால் கல்வி, பொருளாதாரம், வேலை வாய்ப்பு, பாதுகாப்பு இவற்றில் கடும் பின்னடைவை சந்தித்துள்ள முஸ்லிம் சமூகத்தின் விடுதலைக்கும் இதே போன்று ஒடுக்கப்பட்ட சமூகங்களின் விடுதலைக்கும் தீர்வாக வெற்றிடமாக உள்ள ஒன்றை நிரப்பும் வகையில் உருவாக்கப்பட்டதே எஸ்.டி.பி.ஐ.  என்கிற தேசிய அரசியல் கட்சி.

இது மத்திய தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யபட்ட ஒரு பொதுவான அரசியல் கட்சியாகும். இதற்கென்று கொள்கைகளும் சட்டதிட்டங்களும் தனியாக உருவாக்கப்படுள்ளன.

இது எந்தச் சமூக அமைப்பின் துணை அமைப்போ அல்லது கிளை அமைப்போ அல்ல! கட்சியில் மாநில அளவிலும், தேசிய அளவிலும் நிர்வாகிகளாக உள்ளவர்கள் எந்த ஒரு குறிப்பிட்ட அமைப்பையும் சார்ந்தவர்கள் அல்ல. பல்வேறு அமைப்புகளிலும், அரசியல் கட்சிகளிலும் அங்கம் வகித்து செயல்பட்டவர்கள் பல்வேறு மதங்களையும் சார்ந்தவர்கள்.

இப்படி ஓர் அரசியல் பேரியக்கம் தேவை என்பதை உணர்ந்து, அதை உருவாக்க முயற்சி எடுத்தது, உதவி செய்தது என்பதை தவிர எஸ்.டி.பி.ஐ.யின் நிர்வாகத்திற்கும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவிற்கும் வேறு எந்தச் சம்பந்தமும் இல்லை. எந்த மதத்தையும், இயக்கத்தையும், கொள்கைகளையும் சார்ந்தவர்கள் எஸ்.டி.பி.ஐ.யில் உறுப்பினராக இணைய முடியும்; நிர்வாகிகளாகவும் வர முடியும்.

எஸ்.டி.பி.ஐ.யின் கொள்கைகளும் நோக்கங்களும் லட்சக்கணக்கான துண்டுப் பிரசுரங்கள் மூலமும், நூற்றுக் கணக்கணக்கான பொதுக் கூட்டங்கள் மற்றும் நிகழ்ச்சிகள் மூலமும் பொதுமக்களுக்கு தெளிவுபடுத்தப்பட்டுள்ளன. கட்சியின் ''மேனிஃபெஸ்டோ'' என்ற செயல்திட்ட அறிக்கையும் பல்லாயிரக்கணக்கான பிரதிகள் விநியோகிக்கப்பட்டுள்ளன.இவை எவற்றிலும் எஸ்.டி.பி.ஐ. இஸ்லாத்தின் கொள்கைகளையும். கடமைகளையும் சட்டதிட்டங்களையும் அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட அரசியல் கட்சி என்றோ
இதை மீறுபவர்கள் கட்சியில் அனுமதிக்கப்படமாட்டார்கள் என்றோ நாம்
குறிப்பிடவில்லை.

எஸ்.டி.பி.ஐ. முஸ்லிம்கள் மற்றும் ஒடுக்கபட்ட சமூகங்களின் அரசியல் மற்றும் சமூக விடுதலைக்காக உருவாக்கப்பட்டுள்ள பொதுவான அரசியல் கட்சி. இதில் இஸ்லாமிய ஒழுக்கங்களைப் பேணி நடப்பவர்களும் இஸ்லாமிய நடைமுறைகள் மற்றும் மார்க்கத்தை அறியாத முஸ்லிம்களும், தலித்கள், கிறிஸ்தவர்கள் ஒடுக்கப்பட்ட சமூகங்களைச் சேர்ந்தவர்கள், பாதிக்கப்பட்டவர்கள் என லட்சக்கணக்கானோர் உறுப்பினர்களாகவும்
செயல்வீரர்களாகவும் சேர்க்கப்பட்டுள்ளனர். ஆயிரக்கணக்கான கிளைகளும்
அமைக்கப்படுள்ளன. இது போன்றே மாவட்டம், தொகுதி மற்றும் நகர, கிளைக் கமிட்டி நிர்வாகிகளாக பல்வேறு சமூகங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் பொறுப்பேற்று செயல்படுகிறார்கள்.

சமூகச் சீர்கேடுகள், ஒழுக்கக் கேடான செயல்களில் ஈடுபடக்கூடாது என்பது
மட்டும்தான் கட்சியில் கேடர்களாக - செயல்வீரர்களாக சேர்வதற்கு நாம்
வைத்திருக்கும் நிபந்தனை. சாதாரண உறுப்பினராக யார் வேண்டுமானாலும் சேர முடியும். இது தான் எஸ்.டி.பி.ஐ.யின் அமைப்பு முறை. இப்படி பல்வேறு மதத்தவர்கள் சேர்ந்து செயல்பட கூடிய ஒரு கட்சி எப்படி ஒரு மதத்தின் ஒழுக்க நெறிகளையும் கடமைகளையும் அடிப்படையாக வைத்திருக்க முடியும், மற்றவர்கள் மீது திணிக்க முடியும். எஸ்.டி.பி.ஐ.யில் உள்ள யாருக்கும் தங்களுடைய மதத்தை, கலச்சாரத்தை, கொள்கைகளைப் பின்பற்றத் தடை இல்லை.

முஸ்லிம்களையும், ஒடுக்கப்பட்ட சமூக மக்களையும் ஒருங்கிணைத்து அவர்களை அரசியல் அதிகாரம் ஒரு சமுதாயமாக மாற்ற வேண்டும் என்ற இலட்சியக்கனவோடு எஸ்.டி.பி.ஐ. புறப்பட்ட உடனேயே இதன் வளர்ச்சியை தடுக்க உளவுத்துறையும் சங்பரிவார ஃபாசிஸ்டுகளும் கேரளாவில் எஸ்.டி.பி.ஐ,யின் வளர்ச்சி தங்கள் கட்சிக்கு ஆபத்து என உணர்ந்த மார்க்சிஸ்ட்டுகளும், இதுபோன்ற இன்னும் பல்வேறு அமைப்புகளின் தடைகளை உடைத்துத்தான் எஸ்.டி.பி.ஐ. தேசிய அளவில் முன்னேறி வருகிறது.

தமிழகத்தில் எஸ்.டி.பி.ஐ.யின் வளர்ச்சி தங்களுக்கு பெரும் ஆபத்து என்று உணர்ந்த டி.என்.டி.ஜே. என்ற அமைப்பினர் (இவர்களின் தகிடுதத்தங்களையும், ஊழல்களையும், ஒழுக்கக் கேடுகளையும், முரண்பாடுகளையும், அவதூறுப் பிரச்சாரங்களையும், கோஷ்டி மோதல்களையும் வெளிப்படுத்த அதற்கென்றே பல வார, மாத இதழ்களும், இணையதளங்களும் உள்ளன. அது நமக்கு அவசியமில்லை. நம் மீது சுமத்தியுள்ள உணர்வற்ற உணர்வு இதழின்
அவதூறுகளுக்காக மட்டுமே இதை எழுதுகிறோம்). கடந்த (2011 ஜனவரி 7,13, 1421) இரண்டு உணர்வு இதழ்களில் எஸ்.டி.பி.ஐ.யின் மீது அவதூறு செய்திகளையும் முட்டாள்தனமான குற்றச்சாட்டுகளையும் எழுதியதோடு தமிழகம் முழுவதும், வளைகுடா நாடுகளிலும் தொடர் அவதூறுப் பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

உணர்வின் உளறல்களை பி.ஜே. மத்ஹபைச் சார்ந்தவர்களைத் தவிர வேறு யாரும் பொருட்டாக மதிப்பதில்லை (டி.என்.டி.ஜே.வில் உள்ள பெரும்பாலானோர்களே நம்புவதில்லையாம்) என்றிருந்தாலும் உண்மையை தெளிவுபடுத்துவதே இக்கட்டுரையின் நோக்கம்.

பொங்கல் வாழ்த்து பேனரும் - டி.என்.டி.ஜே.யின் அரைவேக்காட்டுத்தனமும்!

நாம் மேற்குறிப்பிட்டதைப் போன்று எஸ்.டி.பி.ஐ. அனைத்து மதத்தினரும் இணைந்து செயல்படும் தேசிய அரசியல் கட்சி என்ற அடிப்படையில், இதன் உறுப்பினர்கள் தங்கள் மதப் பண்டிகைகளுக்கு வாழ்த்து பேனர்கள் வைப்பதை எஸ்.டி.பி.ஐ. மாத்திரமல்ல, இது போன்ற எந்த அரசியல் கட்சிகளும் தடுக்க முடியாது.

இவ்வாறு வைக்கப்பட்ட சில பேனர்களின் புகைப்படங்களை தங்கள் உணர்வில் வெளியிட்டு தங்கள் அரிப்பை தீர்த்துள்ளனர் பி.ஜே. மத்ஹபைச் சார்ந்தவர்கள்.

மேற்படி பேனர்கள் எஸ்.டி.பி.ஐ.யில் உள்ள பல்வேறு மதத்தைச் சேர்ந்தவர்கள்
தாங்கள் வைத்த பேனரில் தங்களது சக அல்லது மேல்மட்ட நிர்வாகிகளின் பெயர்களைக் குறிப்பிட்டு வைத்துள்ளனர். உண்மையை மறைத்து அவதூறு பரப்பும் கும்பல் அந்த பேனரில் முஸ்லிம் அல்லாதவர்கள் பெயர் உள்ளதையோ அல்லது அவர்கள் புகைப்படங்கள் உள்ளதையோ குறிப்பிடவில்லை.

ஒரு கட்சியை விமர்சிக்கும்போது அதன் கொள்கை என்ன? அவர்கள் தங்களை இஸ்லாமிய அரசியல் கட்சி என்று வாதிடுகின்றார்களா? என்பதைத் தெரிந்து கொள்ளாமலேயே வானத்திற்கும் பூமிக்கும் குதிக்கும் இந்த அறிவு சூனியங்களை, மார்க்க அறிஞர்களாக நினைப்பவர்களைப் பற்றித்தான் கவலைப்பட வேண்டும்.

*திருப்பூரில் நடந்ததென்ன?*

திருப்பூரில் ஜும்ஆ உரையில் எஸ்.டி.பி.ஐ. இஸ்லாத்தின் கொள்கைகளைப்
பின்பற்றுவதில்லை என அங்கு உரையாற்றியவர் பேசியுள்ளார். அதோடு பல்வேறு அவதூறுகளையும் வழமை போல அவிழ்த்து விட்டுள்ளார். அங்கிருந்த எஸ்.டி.பி.ஐ. மாவட்டத் தலைவர் அமானுல்லாஹ் தனது மறுப்பைத் தெரிவித்திருக்கிறார். அவர் எழுந்து தனக்கு பதில் சொல்ல வாய்ப்பு தரவேண்டும் எனக் கேட்க, ஜும்ஆ முடிந்ததும் உங்கள் விளக்கத்தை சொல்லுங்கள் எனக் கூறியுள்ளனர். ஆனால் ஜும்ஆ முடிந்த பின்பும் விளக்கம் அளிக்க வாய்ப்பு அளிக்கப்படவில்லை. மீண்டும் கடுமையான
வற்புறுத்தலுக்குப் பின்பு தான் விளக்கம் அளிக்க அவருக்கு வாய்ப்பளிக்கப்படுகிறது.

அதில் தங்களது சாதனையாகக் கருதும் டி.என்.டி.ஜே. கும்பல் முழக்கமிட்ட அவரது விளக்கமும், கருத்தும் அவர்கள் வெளியிட்ட வீடியோவையும் பார்த்தால் தெரியும். நாங்கள் தனிப்பட்ட முறையில் குர்ஆன் ஹதீஸைப் பின்பற்றுபவர்கள். ஆனால் எஸ்.டி.பி.ஐ. குர்ஆன் ஹதீஸை அடிப்படையாகக் கொண்டு செயல்படும் அமைப்பல்ல. இது ஒரு பொதுவான அரசியல் கட்சி. (ஏனெனில் இது அனைத்து மதத்தினரும் இணைந்து செயல்படும் பொதுவான அரசியல் கட்சி). இதுதான் அவர் அளித்த விளக்கம். இந்த விளக்கத்தை ஆய்வு செய்யாமல், அதற்குப் பின் தொடர்ந்தும் வாய்ப்பளிக்காததோடு தாங்கள் வெற்றி பெற்றுவிட்டதாக முழக்கமிட்ட இந்த கொள்(ளை)கை தங்கங்கள்,
அமானுல்லாஹ்வும் அவருடன் வந்தவர்களும் பள்ளிவாசலில் புகுந்து தகராறு
செய்ததாகவும், அடிக்க முனைந்ததாவும் அமானுல்லாஹ் உட்பட 5 பேர் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்கள்.

கேள்வி கேட்டதற்கு பதில் அளிக்காமல் காவல் நிலையத்தில் புகார் அளித்த
அயோக்கியர்களை என்னவென்று சொல்வது?

விபச்சாரிக்கு வக்காலத்து! காவல்துறைக்கு பல்லக்கு!
டி.என்.டி.ஜே.யின் சுயரூபம் பாரீர்!


கடந்த ஜனவரி 21 உணர்(ச்சி)வு இதழில் விபச்சாரிகளுக்கு ஆதரவாக வெளிவந்த ஒரு வக்கிர புத்தியையும், ஆபாச எண்ணங்களையும் (அனுபவம் அப்படித்தான் யோசிக்கத் தோன்றும்) தெளிவுபடுத்தியது. உண்மையில் நடந்த நிகழ்வு யாதெனில்:

மதுரை மஹ்பூப் மற்றும் பாளையம் பகுதியில் புல்லட் ராணி என்ற பெண் குணசுந்தரி என்ற பெண்ணை வைத்து விபச்சாரம் செய்து வந்தார். இதனை அதே பகுதியைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர்கள் பரக்கத், அல்ஹாஜ், பாதுஷா மற்றும் பாஷா ஆகியோர் (அவர்கள் டி.என்.டி.ஜே. அமைப்பில் இல்லாத காரணத்தால்) இதைக் கண்டித்து வந்துள்ளனர்.

கடந்த 12.01.2011 அன்று மேற்படி பெண்கள் பொது இடத்தில் நின்று பிறரைக்
கவர்ந்தவர்களாக நின்று கொண்டு அநாகரீகமாக நடந்துள்ளதோடு, பர்தா அணிந்து முஸ்லிம் இளைஞர்களைக் கவரும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளனர்.

நாம் குறிப்பிட்ட அந்த இளைஞர்கள் மேற்படி இரு பெண்களையும் பிடித்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்ல முயற்சிக்கும்போது புல்லட் ராணி தப்பி விட்டார். குணசுந்தரியை மட்டும் பிடித்து ஆட்டோவில் ஏற்றி சி 3 காவல் நிலையத்திற்கு அழைத்து வந்துள்ளனர். அங்கு விபச்சாரி மீது அவர்கள் கொடுத்த புகாரை வாங்க மறுத்த காவல்துறை (மாமூலோடுதானே விபச்சார விடுதிகள் நடைபெறுகின்றன), புல்லட் ராணியிடமிருந்து ஒரு புகாரைப் பெற்று பெண்ணைக் கடத்தியதாக நான்கு பேரின் மீதும் புகாரைப் பதிவு செய்து கைது செய்தது காவல்துறை.

நடந்த சம்பவத்தைத் திரித்து, காவல் துறையின் அராஜகத்திற்குப் பாராட்டுப்
பத்திரம் வழங்கி, விபச்சாரிக்கு 'இளம் பெண்' என அடைமொழி கொடுத்து, ஆட்டோவில் வரும்போது என்னவெல்லாம் நடந்திருக்கும் என்று தனது ஆபாசக் கற்பனையை அலைய விட்டு தன்னுடைய 'தவ்ஹீதை' வெளிச்சமாக்கியிருக்கிறது மான உணர்வற்ற உணர்வு வார இதழ்
(அவதூறை வாரி இறைக்கும் இதழ்).

இதில் பாஷா என்பவர் எந்தக் கட்சியையும் சேராதவர். பரக்கத், அல்ஹாஜ், பாபு என்ற பாதுஷா ஆகிய மூவரும் த.மு.மு.க.வில் இருந்து விலகி எஸ்.டி.பி.ஐ.யில் சில மாதங்களுக்கு முன் இணைந்தவர்கள். பரக்கத் கிளை துணைச் செயலாளராகவும் அல்ஹாஜ் பொருளாளராகவும் பொறுப்பு வகித்தனர். சம்பவம் நடைபெற்ற இரு மாதங்களுக்கு முன்பு கட்சியின் ஒழுங்குகளை மீறியதால் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில்
இருந்து மூவரும் நீக்கப்பட்டு பரக்கத்துக்கு பதில் பிலால் என்பவர் துணைச்
செயலாளராகவும் அல்ஹாஜுக்கு பதில் ரஃபீக் ராஜா என்பவர் பொருளாளராகவும் நியமிக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றார்கள்.

கைது செய்யப்பட்டவர்களுக்கு ஆதரவாக எஸ்.டி.பி.ஐ.யின் எந்தவொரு நிர்வாகியும் காவல்நிலையம் செல்லவில்லை.

எஸ்.டி.பி.ஐ.யின் நிர்வாகிகள் கைது செய்யப்பட்டதாக (உணர்வைத் தவிர) எந்தவொரு பத்திரிகையோ, அல்லது காவல்துறையோ யாரும் குறிப்பிடவில்லை. இந்த உண்மைகள் தெரிந்தும் எஸ்.டி.பி.ஐ. மீது அவதூறு பரப்பும் நோக்கத்தோடும், காவல்துறைக்கு கைமாறு செய்யும் நோக்கத்தோடும் விபச்சாரிகளுக்கு ஆதரவாக வக்காலத்து வாங்கும் வகையிலும் செயல்பட்டு, பக்கம் பக்கமாக அவதூறு பரப்பிய உணர்வின் செயலும் டி.என்.டி.ஜே.யின் நடவடிக்கைகளும் கேவலமானது என்றால் மிகையல்ல!

உணர்வின் இந்த ஆபாசக் கட்டுரை வந்த உடனேயே அப்பகுதி மக்கள் டி.என்.டி.ஜே. வக்கிர புத்தியைக் கண்டித்து சுவரொட்டிகளை ஒட்டியுள்ளனர்.

சங்பரிவார ஃபாசிஸ்டுகளின் ஊதுகுழலா?
அல்லது உளவுத்துறையின் கைப்பாவையா?


திருவிடைச்சேரியில் கடந்த ரமலானில் ஜமாஅத் தலைவரை பள்ளிவாசலில் புகுந்து படுகொலை செய்த பயங்கரம் நடந்த பிறகு, தமிழகத்தில் உள்ள அனைத்து முஸ்லிம் அமைப்புகளும் ஒன்று சேர்ந்து நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் ஒரு குழு அமைக்கப்பட்டு, அவர்கள் நேரடியாக திருவிடைச்சேரி சென்று விசாரித்து அவர்கள் கொடுத்த அறிக்கையின் அடிப்படையில் தமிழகம் முழுவதும் ''கொலைக் குற்றவாளிகளான டி.என்.டி.ஜே.வினரைக் கைது செய்!'' என அனைத்து அமைப்புகளின் பெயருடன் தமிழகம் முழுவதும் சுவரொட்டி ஒட்டப்பட்டது.

இக்கூட்டத்தில் எஸ்.டி.பி.ஐ.க்கு அழைப்பும் இல்லை. நாம் கலந்து கொள்ளவும்
இல்லை. எஸ்.டி.பி.ஐ. பெயர் சுவரொட்டியில் இடம் பெறவுமில்லை. ஆனால் அந்தச் சுவரொட்டிக்குப் பதிலாக டி.என்.டி.ஜே. ஒட்டிய சுவரொட்டியில், ''தீவிரவாத அமைப்புகளான பாப்புலர் ஃப்ரண்ட், எஸ்.டி.பி.ஐ.யைத் தடை செய்! முன்னாள் சிமி தீவிரவாத அமைப்பின் உறுப்பினர்களான பாக்கர், ஜாவாஹிருல்லாஹ்வை கைது செய்!'' என்றும் குறிப்பிட்டு சங்பரிவாரின் கைக்கூலிகள் தாங்கள் என்பதை நிருபித்தனர்.

நெல்லை ஏர்வாடியில் - டி.என்.டி.ஜே.யின் வம்பும், இமாலயப் புரட்டும்!

மேற்படி சுவரொட்டியை ஏர்வாடியில் அன்றைய தினம் ஒட்டபட்ட எஸ்.டி.பி.ஐ.யின் சுவரொட்டி மீது நள்ளிரவில் ஒட்டினர். எஸ்.டி.பி.ஐ.யின் செயல்வீரர்கள் வேறு இடத்தில் ஒட்டுமாறு சொன்ன போது அங்குதான் ஒட்டுவேன் எனச் சொல்லி கைகலப்பில் ஈடுபட்டு மறுநாள் காலையில் டி.என்.டி.ஜே. பள்ளிவாசலில் பணி புரியும் அம்ஜத் என்பவரை மருத்தவமனையில் அனுமதித்து விட்டு பள்ளிவாசலில் புகுந்து
எஸ்.டி.பி.ஐ.யின் நிர்வாகிகள் இமாமைத் தாக்கியதாக புகார் கொடுத்தனர் இந்த
சினிமா நடிகர்களை மிஞ்சும் மார்க்க நடிகர்கள்.

அத்தோடு விட்டார்களா? தங்களது மீடியாக்கள் மூலம் இமாம் தாக்கப்பட்டதாக நீலிக்கண்ணீர் வடித்தனர்.

தென்காசியில் டி.என்.டி.ஜே.யின் அத்துமீறலும் ஆகாசப் புளுகும்!

தென்காசி நகரில் டி.என்.டி.ஜே. எழுதிய சுவர் விளம்பரத்தை அழித்ததாக தங்களது இணையதளத்தில் நாடகமாடியுள்ளனர். ஆனால் நடந்த உண்மை நிகழ்வு இதோ:

கடந்த ஜனவரி 9ல் தென்காசியில் நடைபெற்ற டி.என்.டி.ஜே.யின் கருத்தரங்கத்திற்காக மஹ்மூது மிஸ்பாஹி ஆலிம் அவர்களின் வீட்டுச் சுவரில் அவரின் அனுமதி பெறாமலேயே விளம்பரம் செய்திருந்தனர். அதை அழித்துவிட்டு எஸ்.டி.பி.ஐ.யின் சென்னை மண்டல மாநாட்டு விளம்பரம் எழுத உரிமையாளர் அனுமதி தந்திருந்தும் மேற்படி நிகழ்ச்சி முடியும் வரை காத்திருந்து விட்டு டி.என்.டி.ஜே. நிகழ்ச்சி முடிந்த மறுநாள் அச்சுவரில் வெள்ளை சுண்ணாம்பு அடித்து SDPI BOOKED எனக் குறிப்பிட்டு அனுமதி
பெற்ற சுவர் என்பதையும் எழுதி விட்டு வந்துள்ளனர் எஸ்.டி.பி.ஐ. நிர்வாகிகள்.

ஆனால் மறுநாள் அந்த இடத்தில் வீட்டு உரிமையாளரிடமோ அல்லது அனுமதி பெற்ற எஸ்.டி.பி.ஐ. நிர்வாகிகளிடமோ தெரிவிக்காமல் தங்களது ஜனவரி 27 நிகழ்ச்சிக்கான விளம்பரத்தை அச்சுவரில் எழுதிச் சென்றுள்ளனர். வம்பு செய்யும் நோக்கோடு செயல்பட்டதால் மறுநாள் எஸ்.டி.பி.ஐ. நிர்வாகிகள் அதை அழித்து விட்டு தங்களது விளம்பரத்தை எழுதினர் டி.என்.டி.ஜே.யின் வன்முறைக் கும்பலோ பல இடங்களில் எழுதியிருந்த எஸ்.டி.பி.ஐ.யின் விளம்பரங்களை அழித்து தங்கள் ஆணவ புத்தியை வெளிப்படுத்தினர்.

இது தொடர்பாக எஸ்.டி.பி.ஐ. நிர்வாகிகள் காவல் நிலையத்தில் புகார் அளித்ததில் 9 டி.என்.டி.ஜே.வினர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இவற்றையெல்லாம் மறைத்து பாபரி விளம்பரத்தை அழித்து விட்டார்கள் எனப் புளுகுவதற்கு என்ன பெயர்? இதற்கு பெயர்தான் அண்டப் புளுகு, ஆகாசப் புளுகு என்பதோ?

இறுதியாக டி.என்.டி.ஜே. அமைப்பினருக்கு நாம் சொல்லிக் கொள்வது எஸ்.டி.பி.ஐ. எல்லா மதத்தினரும் இணைந்து பணியாற்றும் பொதுவான அரசியல் கட்சி. மத ரீதியான பிரச்சாரங்களிலோ அல்லது விமர்சனங்களிலோ எஸ்.டி.பி.ஐ. ஈடுபடாது. இது போன்ற தேவையற்ற வாதங்களிலோ விமர்சனங்களிலோ ஈடுபடக்கூடாது என்ற அடிப்படையிலேயே செயல்பட்டு வருகிறோம். அவதூறுப் பிரச்சாரத்திற்கு பதிலாகவே இதை எழுதுகிறோம். எங்கள் நோக்கத்தையும் பயணத்தையும் திசைதிருப்பாதீர்கள்.

எஸ்.டி.பி.ஐ. தடைகள் உடைத்து பாய்ந்து வரும் பெரும் வெள்ளம். இதைத் தடுக்க நினைப்பவர்கள் காணாமற் போவார்கள். இது போன்ற அவதூறுச்
செய்திகளுக்கு விளக்கம் தருவது மாத்திரமல்ல, சட்ட ரீதியான நடவடிக்கைகளையும் எஸ்.டி.பி.ஐ. மேற்கொள்ளும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

இவண்,
*எஸ்.டி.பி.ஐ. (Social Democratic Party Of India)*
*தமிழ்நாடு.*